இம்மலையில் பல்வேறு விதமான அற்புத மூலிகைகள் காணக் கிடைக்கின்றன. உயிர் காக்கும் சஞ்சீவனி மூலிகை இங்குள்ளது என்றும், ரசவாதம் செய்யப் பயன்படும் சில முக்கிய மூலிகைகள் இங்கு உள்ளன என்பதும் சிலரது கருத்தாக உள்ளது.
அனுதினமும் சூட்சும ரீதியாக சித்தர்கள் வந்து வாசம் செய்யும் மலையாக இது போற்றப்படுகிறது. சமயங்களில் இரவில் சங்கொலி எழுவதாகவும், சந்தன, ஜவ்வாது வாசனை வீசுவதாகவும், ’ஓம்’ பிரணவ ஒலி கேட்பதாகவும் இங்கு இரவில் தங்கிச் சென்ற பக்தர்கள் சிலர் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
ஏறுவதற்கரிய இம்மலையை நடந்தும், தவழ்ந்தும், கடப்பாரைப் பாதை வழியாகவும், தண்டவாளப் பாதை வழியாகவும், அமர்ந்தும் தான் செல்ல முடியும். திருவண்ணாமலையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள இம்மலையை திருவண்ணாமலையிலிருந்து கடலாடி சென்றும், தென்பாதி மங்கலம், மகாதேவ மங்கலம் என்ற ஊர்களின் வழியாகவும் அடையலாம்.
இலக்கியங்களில் ‘நவிரமலை’ என இம்மலை குறிக்கப்பட்டுள்ளது. சஞ்சீவி மலை, சித்தர் மலை, திரிசூலமலை என்றும் இதற்கு பல்வேறு பெயர்கள் உண்டு. செங்கம் பகுதியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட மன்னன் நன்னனின் கோட்டை இம்மலைமீது சிதிலமடைந்து காணப்படுகிறது.
இங்குள்ள இறைவன் மல்லிகார்ஜூனர் என்றும் அன்னை பிரமராம்பிகை என்றும் போற்றப்படுகிறாள். சித்தர்கள் அனுதினமும் வந்து பூஜிக்கும் மலை இது. போகருக்கு தனி சன்னதி உள்ளது. காரியுண்டிக் கடவுளும், மரகதவல்லி அம்மனும் மிகுந்த வரப்ரசாதிகள்.
வருடம் தோறும் மார்கழி மாதம் முதல் தேதி இம்மலையை பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். மொத்தம் 22 கி.மீக்கும் மேற்பட்டது இதன் கிரிவலப் பாதை. செல்லும் வழியில் உள்ள பச்சையம்மன் ஆலயம் மிகுந்த சிறப்புப் பெற்ற ஒன்றாகும். அமாவாசையன்றும், பௌர்ணமியன்றும் மற்றும் சிவராத்திரி, பிரதோஷ காலங்களில் மலைவலம் வருவதும் மலை ஏறுவதும் இங்கு மிகச் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.
மனதுக்குச் சாந்தியும், உடலுக்கு உற்சாகமும் தரும் இம்மலைத் தலம் உண்மையில் ஒரு அற்புதமான திருத்தலம் என்றால் மிகையில்லை.
No comments:
Post a Comment